தேசிங்கு ராஜாவின் செஞ்சி கோட்டை - பயணம்
சிறுவயதில் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்திய சில இடங்கள் நம் பெரியவர்களான பிறகு பார்க்கும் பொழுது அந்த பிரமிப்பை ஏற்படுத்தாது போகலாம். நான் சிறுவயதில் செஞ்சி கோட்டை (ராஜா கோட்டை) பார்க்கும் ஏற்பட்ட பிரமிப்பு இன்றைக்கு பார்க்கும் போதும் அதே பிரமிப்புடன் இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதி கிடையாது. திருவந்திபுரம் பகுதியில் மட்டு் சிறிய மலைகள் இருக்கும். இந்த பயணம் ஒரு சாகசப் பயணமாக எங்களுக்கு இருந்தது.
இங்குள்ள மலைகள் கற்களை கையால் அள்ளி மலையாக பிடித்து வைத்தது போல் உள்ளன. ராஜா கோட்டை, ராணி கோட்டை இரண்டும் தனித்தனி மலைகளில் அமைந்துள்ளன.
ராணி கோட்டை
ஐந்து ரூபாய்க்கு நுழைவுச் சீட்டை பெற்றுக் கொண்டு காலை 10 மணிக்கு ராஜா கோட்டையில் ஏற ஆரம்பித்தோம். சிறிது தூரம் ஏறியதுமே எப்படி நாம் ஏற போகிறோம் என நினைக்குமளவுக்கு நாக்கு தள்ளிவிட்டது, கையில் குடிக்க தண்ணீரும் கொண்டு வரவில்லை, மலையில் குடிகக தண்ணீர் கிடையாது.
மலையில் ஏறும் பொழுது இளைப்பாறுவதற்கு சிறிய மண்டபங்கள் (நுழைவு வாயில் போல) அமைந்துள்ளன. சில இடங்களில் உங்கள் பொருட்களை பிரித்து பார்த்து, தனக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் குரங்குகள் நிறைய உள்ளன. நண்பரின் பேக்கை பிடுங்கிய குரங்கு, ஜிப்பை பிரித்து உள்ளே உள்ளதை பார்த்த பின்தான் திருப்பி கொடுத்தது.
உச்சியை நெருங்கும் போது தூக்கு பாலம் ஒன்று உள்ளது. மேலே சிறிய கோயில் மட்டும் மட்டுமே முழுமையாக உள்ளது. மற்றவை பெரும்பாலும் சிதைந்தே காணப்படுகிறது. கோயில், மணிக்கூண்டு, கருவூலம் மற்றும் சிலமண்டபங்கள் உள்ளது. பாறைகளுக்கிடையே ஒரு சிறிய படியின் வழியே இறங்கினால் ஒரு குளம் இருக்கும். இதை முதன் முறையாக செல்லும் பொழுது பார்த்துள்ளேன். இப்போது இறங்கும் வழி அசுத்தமாக உள்ளது.
கோட்டை என்றதும் நாம் பலவாறு கற்பனை செய்து கொண்டு மேலே வந்தால் இதுதானா, இதுக்குத்தான் இவ்வளவு சிரமபட்டு ஏறினோம் என்று எண்ண தோன்றும். அக்காலத்தில் சத்ரபதி சிவாஜி, இந்தியாவில் சிறந்த பாதுகாப்பான கோட்டை என்று இக்கோட்டையை பாராட்டியுள்ளார்.
உள்ளூர்காரரின் மூலம் தெரிந்து கொண்டவை:
- சுமார் 450 வருடங்களாக இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.
- தேசிங்கின் தந்தையின் இன்னோரு மனைவியின் மகனால் இவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
- தேசிங்கின் வீழ்ச்சிக்குப் பின் முகலாயர்களால் இக்கோட்டை கொள்ளையடிக்கப்பட்டது, பின் ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
- பிரெஞ்சுக்காரர்களால் இக்கோட்டையில் உள்ள சுமார் 14 கட்டிடங்கள் அவற்றின் கற்களுக்கு வரிசையாக எண்கள் கொடுக்கப்பட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லபபட்டதாம். அவர்கள் தாய்நாட்டிற்கு எடுத்துச் செல்லா முடியாத கற்கள் இன்றும் புதுச்சேரியில் கடற்கரையில் காணலாம் என்றார்-
இவ்வாறு பலரால் கொள்ளையடிக்கப்பட்டும் இன்றும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.
தொல்லியல் துறையின் பராமரிப்பில் இக்கோட்டை இருக்கிறது. புகழ்பெற்ற கல்யாண மண்டபத்தை பராமரிப்பின் காரணமாக பார்வையிட அனுமதி இல்லை.
கோட்டைக்கு செல்வோர் கட்டாயமாக தேவையான குடிதண்ணீரை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மதியம் 3 மணிக்கு மேல் கோட்டைக்கு செல்ல அனுமதியில்லை. கோட்டையை மூடுவதற்கு முன்பு ஒலி எழுப்புவார்கள், நாம் அதற்குள் கீழே இறங்கிவிட வேண்டும். செஞ்சி கோட்டை அனைவரும் பார்க்க வேண்டிய இடம். திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்ல பேருந்து வசதி உள்ளது.
0 comments:
Post a Comment